Sunday, 13 December 2009

யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்

யாமம் என்பது இரவு பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை உள்ள நேரத்தைக் குறிக்கிறது. ("ஏன்டா இப்படி நடுச்சாமத்தில பேய் மாதிரி வீட்டுக்கு வர்றே?" என்று விடலைப் பருவத்தில் பலரும் திட்டு வாங்கியிருக்கலாம்.)

ஜாமம் என்பது சமஸ்கிருத வார்த்தை, யாமம் என்பதே தூய தமிழ்ச் சொல் என்கிறது ஒரு தமிழ்ப் பேராசிரியரின் இணைய தளம்.

யாமம் என்பது ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் நேரம் என்கிறது இன்னொரு இணையதளம். (இரவு 1 - 3 மணி ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் நேரம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய "யாமம்" : சென்னையின் வரலாறுடன், புனைவு கலந்து எழுதப்பட்ட ஒரு புதினம்.

குழந்தைகள் படிக்கக்கூடிய கதையல்ல, "விறுவிறுப்பான கதைகள் மட்டுமே படிப்பேன்" என்பவர்களும் விரும்பக் கூடிய புத்தகமல்ல.

சல்மான் ருஷ்டி எழுதிய Midnight's children என்ற புதினத்தில் இந்திய சுதந்திர வரலாற்றுடன் Magical Realism என்ற யுத்தியுடன் கற்பனைக் கதாபாத்திரங்களை உலவ விட்டிருப்பார். (I believe, it was also an auto-fictional novel) அது போல ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வியாபாரம் செய்ய வந்து நாட்டையே அடிமைப்படுத்திய வரலாற்றுடன், சதாசிவப் பண்டாரம், வகிதா, கரீம், பத்ரகிரி, கிருஷ்ணப்பா போன்றவர்களின் கதைகளையும் இணைத்து எழுதியுள்ளார் எஸ். ரா.

கடுமையான வேலைக்கு நடுவிலும், தினமும் இரவு சில பக்கங்கள் வாசித்தே ஆகவேண்டும் என்ற அளவுக்கு ஈர்த்து விட்டது எஸ்.ராவின் எழுத்து.

மூன்று பெண்களை மணக்கும் கரீம், விசாலாட்சியுடன் குடும்பம் நடத்தும் பத்ரகிரி, அவனது தம்பி திருச்சிற்றம்பலம் வெளிநாட்டுக்கு படிக்க சென்றவுடன், பத்ரகிரியுடன் காமக் கூடல் புரியும் அவனது மனைவி தையல்நாயகி, சாமியாரான சதாசிவம் வரும் அத்தியாயங்களிலும் கூட காமம் வழிந்தோடுகிறது.

கிருஷ்ணப்ப கரையாளர் பங்காளியின் மேல் போட்ட வழக்குக்காக மதராப்பட்டினத்தில் அலைந்து திரிவதும், மேல் மலைக்கு திரும்பிய பின் காட்டில் அலைந்து திரிவதும், சொத்துக்காக சண்டை போட்டதெல்லாம் போதும், மேல்மலை மட்டுமே எனக்குப் போதும் என்று முடிவு செய்வது, வேலைக்காக மாநகரில் வாழும் நம்மில் பலரும், "ஜன நெரிசல் இல்லாத ஒரு மலைப்பகுதியில் நமக்கும் கூட இப்படி ஒரு வீடு அமைந்து விடக் கூடாதா" என்று ஏங்க வைக்கும்.

ஆங்கிலோ இந்திய பெண்கள் பலரும் வேசிகள் என்று பொதுமைப்படுத்துதல் சற்று அபத்தமாகப் படுகிறது. பத்ரகிரி & தையல்நாயகிக்கு பிறக்கும் குழந்தை அவனது உறவினர்கள் சாபமிடுவது போலவே இறந்து போவதும் சற்று செயற்கையாக இருப்பது போல் தோன்றுகிறது. அப்படியானால் பண்டாரமாக அலைந்து, எங்கிருந்தோ வந்து ஒரு பெண்ணுடன் கலவி கொண்டு, அவள் பிரசவ வலியில் துடிக்கும் வேளையில் நிர்கதியாக விட்டு மீண்டும் பண்டராமாக அலையும் சதாசிவம் இறுதியில் ஒரு கோவிலில் புகையாய் மறைந்து போவதாக சொல்லும் போது, அந்த பெண்ணும் இவனை "நீ நாசமாப் போயிருவே"-ன்னு தான் சபித்திருக்க வேண்டும்? "ஒருவேளை சாமியாராக இருந்தால் அந்த மாதிரி சாபமெல்லாம் பலிக்காதோ?" என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

சில குறைகளை நீக்கிவிட்டு பார்த்தால் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு அற்புதமான புதினம் என்று நான் சொல்லுவேன்.

எங்கிருந்து இந்த மனிதருக்கு இத்தனை வார்த்தைகள் வந்து கொட்டுகின்றன, காட்டினைப் பற்றியும், அங்குள்ள செடிகள், பறவைகள், பூச்சிகள், அத்தர் என்னும் பரிமளம் செய்யும் முறை, இவையெல்லாம் குறித்து எங்கு படித்திருப்பார், எப்படி அவர் படித்த பல தகவல்களையும் புனைவையும் கலந்து இவ்வளவு சுவாரஸ்யமாக வழங்க முடிகிறது என்று மலைப்பாக இருக்கிறது.

ராமகிருஷ்ணனின் பிற நூல்கள் வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன என்ற போதும், "யாமம்" ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டால் எக்கச்சக்கமாக விற்கும் என்று நம்புகிறேன்.

இருப்பினும் ராமகிருஷ்ணனின் வார்த்தைப் பிரயோகம், வர்ணனை இவையெல்லாம் அதே வீரியத்துடன் மொழியாக்கம் செய்யப்படுமா என்ற சந்தேகமும் எழுகிறது.

Tuesday, 8 December 2009

பயணங்கள் முடிவதில்லை! (கொஞ்சம் பீர், கொஞ்சம் பிரியாணி)


சில மாதங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம், இப்போது தான் எழுத நேரம் கிடைத்தது.

சென்னை செல்வதற்காக ஒரு நாள் வெள்ளி இரவு 10.50 EC BMTC bus depot-லிருந்து கிளம்பும் KSRTC டிக்கெட் வாங்கி வைத்தேன்.


வெள்ளி மதியம் நண்பன் சுனா லனா-விடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. "ஏழு மணியளவில் வெனா ஜனா வின் மகிழுந்து சென்னை செல்வதால், சேர்ந்து போகலாம்".


நான்கு மணியளவில் பேருந்து சீட்டை KSRTC இணையத் தளத்தில் cancel செய்து விட்டு, நானும் உங்களோடு சேர்ந்து வருகிறேன் என்று பதில் அனுப்பி விட்டேன்.


சனா பனா Gate 12, Gate 14 என்று குழப்பித் தள்ளி, ஒரு வழியாக பன்னிரெண்டாம் வாசலுக்கு வந்து நின்றால் புகை மூட்டம் அதிகமாக இருந்தது. பனி மூட்டமில்லை, சிகரெட், பீடிப் புகை! பெங்களூரில், இருக்கும் புகையும் தூசியும் போதாதா நண்பர்களே? நீங்க வேற சொந்த செலவில் நுரையீரலை மாசுபடுத்தனுமா?


சில நிமிடங்கள் கழித்து வந்து நின்றது கருப்பு நிற போர்ட் ஐகான், சுனா லனாவுக்கு வழக்கம் போல ஓட்டுனர் வேலை. உள்ளே ஏறி உட்கார்ந்ததும் "வாங்க, என்ன சாப்பிடுறீங்க?" என்றார் வெனா ஜனா. என்னடா, இப்போ தான் இவரோட கார்ல ஏறுறோம், அறிமுகம் செய்து கொள்ளும் முன்பே சாப்பிடுறதைப் பத்திக் கேக்குறாரே? விருந்தோம்பல் தமிழர் பண்பாடு-ன்னு உணர்ந்தவர் போலேருக்கு-ன்னு நினைச்சேன்.


"நான் வரும்போது நூடில்ஸ் கொஞ்சம் சாப்பிட்டேன், எதுவும் வேண்டாம், நன்றி" என்றேன்.


"இல்லை, ஓட்டுனர் இருக்கைக்கு பின்னே குளிர் பானங்கள் இருக்கு" என்றார் அவர்.


"பெரும்பாலும் நான் குளிர் பானங்கள் குடிப்பதில்லை" என்றேன்.


சுனா லனா சொன்னாரு, உங்களுக்கு 2 லிட்டர் தண்ணி இருக்கு, வேணும்னா கொஞ்சம் sprite மிக்ஸ் பண்ணிக்கோங்க. குவார்டர் வோட்கா இருக்கு, ஆறு பாட்டில் பீர் இருக்கு. முந்திரிப்பருப்பு, மிக்சர், காராச்சேவு எல்லாம் இருக்கு.

சுனா லனா மகிழுந்து-ல கூட்டிட்டுப் போறேன்னு தானே சொன்னான், இது ஒரு நடமாடும் மதுபான விடுதியா இருக்கே? இப்போ தான் உடற்பயிற்சி நிலையத்தில 200 கலோரிகள் குறைச்சோம், இவனுங்க 2000 கலோரிகள் ஏத்தி விட்டுருவானுங்க போலேருக்கே?


வேண்டாங்க, வண்டிக்குள்ள சிந்திட்டா ரொம்ப நாத்தமடிக்கும்.


அதுக்கு வேலைக்காரன் இருக்கான், வாரத்துக்கு நாலு தடவை கழுவித் துடைச்சு வைச்சிருவான்.

பயணம் செய்யும் போது வண்டி குலுங்கும், இப்போ போய் தண்ணியடிச்சிட்டு, நொறுக்குத் தீனி, அது, இதுன்னு தின்னா வாந்தி தான் வரும்.


தங்க நாற்சக்கர சாலையில போறோம், சுத்தமா குலுங்காது.


(ஆஹா, எந்த பக்கம் போனாலும் அணை கட்டுறான்?) ஒகே, கடைய எப்போ சார் தொறப்பீங்க?

சுனா லனா முகத்தில எந்த உணர்ச்சியும் காட்டாமே ஒட்டிக்கிட்டு போனான். வழியில ஆம்பூர்ல ஸ்டார் ஹோட்டலுக்கு ஓடிப் போய் சிக்கன், மட்டன் பிரியாணி எல்லாம் வாங்கிட்டு வந்தான். (நீ எவ்வளவு நல்லவன்? ஆறு லார்ஜு அடிச்சாலும், அமைதியா ஒக்காந்திருக்கிற உன்னை நாலு மடக்கு பச்சைத் தண்ணி குடிக்க வைச்சிட்டு, பீர், வோட்கா குடிக்கிற பயல்களுக்கு சோறு வாங்கிக் கொடுக்கிறியே? அழுகையா வருது!). பிரியாணி என்ன ருசி, அதெப்படி இவுங்களுக்கு மட்டும் கறி அவ்வளவு நல்லா வெந்து அருமையா வருது? ஸ்வீட் பீடா வாங்கித் தின்னுட்டு நின்னோம் கொஞ்ச நேரம்.

ஒரு பீர் அடிச்ச மப்புக்கே, நம்ம வெனா ஜனா ஒன்பதாம் வகுப்பில ஆரம்பிச்சு, முந்தின நாள் ஒன்பது மணி வரைக்கும் அவர் வாழ்க்கையில நடந்த காதல்/காமக் கதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு.

"அப்புறம்... உங்க அனுபவங்களைச் சொல்லுங்க"

(ஏன்டா இதென்ன உலக நியதியா? தண்ணியடிச்சா மூணு மணி நேரம் முன்னால சந்திச்சவன் கிட்ட அந்தரங்க விஷயமெல்லாம் சொல்லனுமா?)
இன்னொரு குவார்டர் வாங்கினா அடிப்பேன், ஆனா இப்படி உளற மாட்டேன்.

அங்க கடுப்பாகி படுத்தவர் தான், கத்திப்பாரா வரைக்கும் எந்திரிக்கவேயில்ல.

Sunday, 29 November 2009

ஒரு நாள், ஒரு கனவு...



சீக்கிரம் எழுந்திருங்க, கோவிலுக்குப் போகணும்.


எப்பவும் ஞாயிற்றுக்கிழமை 8
மணி பூசைக்குத் தானே போவோம்? எதுக்கு 5.30 மணிக்கு எழுப்புறே?

இன்னைக்கி வியாழக்கிழமை, 26th November.

வியாழக்கிழமை எதுக்கும்மா
கோவிலுக்கு போகணும், என்னைய தூங்க விடு, வேணும்னா நீ போயிட்டு எனக்கும் சேர்த்து வேண்டிக்கோ.

ஆறு வருஷத்துக்கு முன்னால திருச்சியில நம்ம திருமணம் நடந்தது நினைவிருக்கா?
நன்றி திருப்பலிப் பூசைக்கு சொல்லிருக்கோம், இப்பவே மணி 5.35 ஆயிடுச்சு. சீக்கிரம் கெளம்புங்க 5.55-க்கு கோவில் உள்ளே போயிடணும்.

ஏம்மா, சாயங்காலம் ஆறு மணிக்கு போக கூடாதா?


நீங்க வேலையை முடிச்சிட்டு வர்றதுக்கே, ராத்திரி 12 மணி ஆகிடுது, அப்புறம் எப்படி ஆறு மணி பூசைக்கு போவீங்க? சுடுதண்ணி எல்லாம் போட்டு வைச்சிட்டேன், பத்து நிமிஷத்துல நீங்க கெளம்பி இருக்கணும். உங்க பையனே தயாராகிட்டான், shoes மட்டும் தான் போடல.

போலாமா? வீட்டு சாவி எங்க? மத்த கதவெல்லாம் பூட்டிட்டியா?

6 மணிக்கு தேவாலய வாசலை நெருங்கும் போது, "Mission Impossible" theme music கேட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் தான் நம்ம கோவில் பாடல்களையெல்லாம் திருடுறாருன்னு சொன்னாங்க. இப்போ நம்ம தேவாலய பாடல் குழு ஹாலிவுட் பாட்டைத் திருட ஆரம்பிச்சிட்டாங்களா?

பாட்டு கேட்டது என்னோட அலைபேசியில்.

"Hey, sorry, did I wake you up too early?"

"hmmmm, no worries, what time is it?"

"9 am, there's an issue and I need your help. That ticket raised by that Italian customer, it's pending for 2 days, his manager is asking for an update."

"It must be 5.30 am CET? God damnit, I left office at 1 am and slept at 2, man. Why can't he just sleep and let me sleep too? He always wants all his issues to be resolved within a few hours. Theirs is not the only project, we have hosted on our servers. oh by the way, why don't you ask the team lead for help?"

"He's not around, he logged in at 8.30 am and then he left for breakfast"

"And then he would be out for Tcon interviews, etc., for 2 hrs everyday. I wish he gets a better job soon. He's not physically & mentally in our project for more half of the time. You work on that migration stuff, I allocated to you and I will look into this incident when I come into office at 10 am, ok?"

பெங்களூர் அலுவலகத்துக்கு நடந்து செல்லும் போது மனைவியை அலைபேசியில் அழைத்து சொன்னேன் "திருமண நாள் வாழ்த்துக்கள், சனிக்கிழமை சென்னைக்கு வந்திருவேன், அப்போ கொண்டாடிக்கலாம்".