ஜாமம் என்பது சமஸ்கிருத வார்த்தை, யாமம் என்பதே தூய தமிழ்ச் சொல் என்கிறது ஒரு தமிழ்ப் பேராசிரியரின் இணைய தளம்.
யாமம் என்பது ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் நேரம் என்கிறது இன்னொரு இணையதளம். (இரவு 1 - 3 மணி ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் நேரம் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.)
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய "யாமம்" : சென்னையின் வரலாறுடன், புனைவு கலந்து எழுதப்பட்ட ஒரு புதினம்.
குழந்தைகள் படிக்கக்கூடிய கதையல்ல, "விறுவிறுப்பான கதைகள் மட்டுமே படிப்பேன்" என்பவர்களும் விரும்பக் கூடிய புத்தகமல்ல.
சல்மான் ருஷ்டி எழுதிய Midnight's children என்ற புதினத்தில் இந்திய சுதந்திர வரலாற்றுடன் Magical Realism என்ற யுத்தியுடன் கற்பனைக் கதாபாத்திரங்களை உலவ விட்டிருப்பார். (I believe, it was also an auto-fictional novel) அது போல ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வியாபாரம் செய்ய வந்து நாட்டையே அடிமைப்படுத்திய வரலாற்றுடன், சதாசிவப் பண்டாரம், வகிதா, கரீம், பத்ரகிரி, கிருஷ்ணப்பா போன்றவர்களின் கதைகளையும் இணைத்து எழுதியுள்ளார் எஸ். ரா.
மூன்று பெண்களை மணக்கும் கரீம், விசாலாட்சியுடன் குடும்பம் நடத்தும் பத்ரகிரி, அவனது தம்பி திருச்சிற்றம்பலம் வெளிநாட்டுக்கு படிக்க சென்றவுடன், பத்ரகிரியுடன் காமக் கூடல் புரியும் அவனது மனைவி தையல்நாயகி, சாமியாரான சதாசிவம் வரும் அத்தியாயங்களிலும் கூட காமம் வழிந்தோடுகிறது.
சில குறைகளை நீக்கிவிட்டு பார்த்தால் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு அற்புதமான புதினம் என்று நான் சொல்லுவேன்.
எங்கிருந்து இந்த மனிதருக்கு இத்தனை வார்த்தைகள் வந்து கொட்டுகின்றன, காட்டினைப் பற்றியும், அங்குள்ள செடிகள், பறவைகள், பூச்சிகள், அத்தர் என்னும் பரிமளம் செய்யும் முறை, இவையெல்லாம் குறித்து எங்கு படித்திருப்பார், எப்படி அவர் படித்த பல தகவல்களையும் புனைவையும் கலந்து இவ்வளவு சுவாரஸ்யமாக வழங்க முடிகிறது என்று மலைப்பாக இருக்கிறது.
இருப்பினும் ராமகிருஷ்ணனின் வார்த்தைப் பிரயோகம், வர்ணனை இவையெல்லாம் அதே வீரியத்துடன் மொழியாக்கம் செய்யப்படுமா என்ற சந்தேகமும் எழுகிறது.


.jpg)